பிறந்தவர் யாவரும் இறப்ப துறுதியெனும் பெற்றியை அறிந்தாரேல் - மானம் துறந்தரம் மறந்தும்பின் உயிர்கொண்டு வாழ்வது சுகமென்று மதிப்பா ரோ? அப்டின்னு சுப்ரமணிய பாரதியார் எழுதியிருந்தலும், நாம எல்லாம்.. சரி.. சரி.. நா மட்டும்தான்.. மானத்தை மாஞ்சா போட்டு பறக்கவுடுவோம்! "சரி, அதுக்கென்னடா இப்ப?"ன்னு ஒரு 'நாட்டாமை சொம்பை' தூக்கி நடுவுல போடுறது நல்லாவே கேக்குது. ஒன்னுமில்லைங்க.. காலையில என் கூட வேலை பாக்குற ஒருத்தரு, அவரோட வேலையை ஒழுங்கா பாக்காததால, அவரு ஒழுங்கா வேலை பாக்குறாரான்னு பாக்கற ஒருத்தவருகிட்ட, திட்டு வாங்கிட்டாரு!
ஏத்து வாங்குனவன் அப்டியே போவாம, என்கிட்ட வந்து.. "மானம் மருவாத உள்ளவன் எவனாவது இங்க வேலை பாப்பானா? இந்த மானங்கெட்ட பொழப்பு பொழைக்க... நாளு தெரு பிச்ச எடுத்து சாப்புடலாம்" ன்னு சொல்லிட்டு போயிட்டான்! (அட.. கோ-டாக்! அதை என்னை பாத்து ஏன்டா சொன்ன??) சரி.. மானம்னா என்ன? அதுக்கும் நமக்கும் சம்பந்தம் இருக்கா? கடந்த ஒரு வருஷத்துல எத்தனை முறை போயிருக்கு? எங்கங்க போயிருக்கு?, எந்தந்த இடத்துல போயிருக்கு? அப்டின்னு சும்மாதானே இருக்கோம்ன்னு பழைய டேட்டாவை, விரலை வச்சி சுரண்டி பாத்ததுல.... டொய்ன்..டொய்ன்..டொய்ன்.. (Flash for UR Front)
ஒரு தடவ மீன் மார்கேட்டுக்கு போகும் போது.. பழக்க தோஷத்துல, என்னுடைய ஆப்பீஸ் ஐ.டி. கார்டை மாட்டிகிட்டு போயி.. என் நண்பன் இதை எதுக்குடா மாட்டிட்டு வந்தேன்னு கேட்டு கொஞ்ச மானம் போச்சி! அப்புறம் மீனை வாங்கிட்டு, ஃப்ரண்ட் கூட போயி ஒரு நல்ல ஹோட்டல்ல சாப்பிட்டுட்டு, கேன்டீன்ல சாப்பிட்ட பழக்க தோஷத்துல, கையோட தட்டை கொண்டு போயி வாஷ் பேசின்ல கழுவி பாக்கி உள்ள மானமும் போச்சி!!
இதுனாலும் பரவாயில்லை.. ஒரு நாள் என் ரூமுக்கு வந்த என் தம்பி.. என்னுடைய பர்சனல் இன்டர்நெட் கனெக்சன்ல யூ டியூப்ல வீடியோ எதையோ பாத்துகிட்டு இருக்குறப்ப.. "ஐ.. இந்த சைட்டை ப்ளாக் பண்ணலையா?" ன்னு ஆப்பீஸ்ல இருக்குற பழக்க தோஷத்துல கேட்டு கொஞ்சம் மானம் போச்சி! சரின்னு அவனும் சிரிச்சிகிட்டே ஊருலேருந்து வந்திருந்த சித்தி பொண்ணு கல்யாண சி.டி.யை போட்டு பார்த்தான், பார்த்துகிட்டே இருக்குறப்ப.. சிவ பூஜை கிங்காங் போல பக்கத்து ரூம்மெட் வந்து கிரிகெட் ஸ்கோர் பாக்க டி.வியை மாத்த சொல்ல.. நான் ரிமோட்ல ஆல்ட் + டேப் கீயை தேடிகிட்டு இருந்தேன்! நீங்க என்னத்த தேடுறீங்க? பாக்கி உள்ள மானமும் போச்சின்னு சொன்னாதான் அடுத்த பாரா போவீங்களோ???
அடுத்த (கட்ட(மா)னம், என் கூட வேலை செய்யுற நோண்டுலிங்கம் ஒருதன், மொபைல்ல உள்ள ஒரு முக்கிய மெசேஜை தெரியாம டெலீட் பண்ணிட்டு, தலையில கை வச்சிகிட்டு ஒக்காந்திருந்தான். நா சும்மா இல்லாம கூலா போயி அவங்கிட்ட.. "விட்ரா.. விட்ரா... 'ரீசைக்ளின் பின்'லேருந்து எடுத்துகலாம்"ன்னு சொன்னப்ப விட்ட 'லுக்'குலயே மானம் போச்சி! இப்டி எங்க போனலும் என் மானத்தை மால்லாக்க போட்டு கும்மியடிச்சதை நினைச்சு உடம்பு சரியில்லாம போச்சு. சரிடான்னு முடியாம நடந்து போயி மெடிக்கல் ஷாப்ல மாத்திரை கேட்டேன்.. மெடிக்கல்காரன் 250mg வேணுமா? 500mg வேணுமான்னு கேட்க, நான் உடனே 512mg குடுங்கன்னு சொல்லி, அவமானமா.. மானம் போச்சி!!
தோ.. இப்ப கடைசியா அவதார் படம் பாக்க தியேட்டர் போனப்ப, ஷாப்பிங் மால்ல பர்ச்சேஸ் பண்ண கூப்பனை காமிச்சிட்டு (தெரியாமதாங்க.. ம்கும்.. நம்ப மாட்டீங்களே!) உள்ள போக பாக்க.. கவுண்டர்காரன் சட்டை புடிச்சி இழுத்து டிக்கேட் கேட்டு வாங்க அங்க கொஞ்சம் மானம் போச்சி! அது மட்டுமா? உள்ள போயி படம் பாக்கறப்ப.. டைம் என்னன்னு தெரிஞ்சிக்க கம்ப்யூட்டர்ன்னு நினைச்சு, ஸ்கிரீன் ஓரத்துல கெடிகாரத்தை தேடி பாத்தேங்க.. தேடி பார்த்ததோட சும்மா இல்லாம, அந்த உண்மையை இப்ப உங்ககிட்ட சொல்லி... ஒட்டிகிட்டுயிருந்த மொத்த மானமும் போச்சுல்ல! போச்சுல்ல!! போச்சுல்ல!.
முக்காத குறிப்பு : இதுக்கு முன்னாடி உனக்கு மானம் இருந்துச்சா? இருந்துச்சுன்னா எப்படிப் போச்சு? எந்தப் பக்கமா போச்சு? எதுல ஏறி போச்சு? அப்டின்னு எல்லாம் ரொம்ப மொக்கையா எதையும் யோசிக்காம.. தலைப்பையே காப்பி பேஸ்ட் பண்ணி போட்டுட்டு போங்க!!